தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

என் தாயார்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு பகிர்தல்களுடன் என்னுடைய ஆத்மார்த்தமான ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு மிகவும் ஆவலாய் இருக்கிறது.பொதுவாகவே மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். என் தாயார் அடிக்கடி சொல்லும் வாக்கியம், "தேசே தேசே களத்ராணி-தேசே தேசே பாந்தவா" என்று ஒரு முது மொழி. ஆமாம் எந்த தேசத்துக்குச் சென்றாலும், நாம் பழகும் விதத்தை வைத்து, உறவுகள் கிடைத்துவிடும், நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுத்தால் மனைவியும் கிடைத்துவிடுவாள், ஆனால் எந்த தேசத்திலும், எந்த உலகத்திலும் நம்முடைய தாய் கிடைக்க மாட்டாள். தாயைப் போல அன்பு செலுத்தக் கூடிய தாய்மார்கள் கிடைப்பார்கள், ஆனால் யாரும் நம் தாய் ஆக முடியாது.
நம்மைப் பத்து மாதம் சுமந்து, பலவகையான கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு, தொப்புள் கொடி வழியே உணவூட்டி நாம் நன்றாக இருக்க வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காக நம் ஆரோக்கியத்திற்காக, தன்னுடைய மொத்த உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டு, தன்னுடைய ரத்தத்தையே பாலாக்கி நமக்கு அளித்து நமக்காகவே வாழும் நம் தாய்க்கு ஈடாக வேறொருவர் கிடைக்க மாட்டார் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவேதான் இறைவனே தாய்மையின் அன்பான அரவணைப்பை தானும் அனுபவிக்க கர்ப்ப வாசம் செய்தான், கிருஷ்ணனாக அவதரித்தான் என்று பௌராணிகர்கள் சொல்லுவார்கள். ஆகவே தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
இல்லற தர்மத்திலிருந்து துறவற தர்மத்துக்குப் போகும் பெரியவர்கள் கூட அவர்கள் செல்லும் வழியில் அவருடைய தந்தை எதிரே வந்தால், தந்தையாயினும், அந்தத் துறவி தான் பெற்ற மகனாயினும், அந்த தந்தைதான் அந்தத் துறவியை வணங்க வேண்டும், ஆனால் தாய் எதிரே வந்தால் அந்தத் துறவிகூடத் தாயைத்தான் வணங்க வேண்டும். அப்படிப்பட்ட தாயை வணங்குவோம்.
என்னுடைய தாயர் பெயர் ஆர். கமலம்மாள். அவர் ஒரு கவிஞர், எழுத்தாளி, நம்முடைய பாரத தேசம் விடுதலை பெறக் காரணமாயிருந்த அனேக தியாகிகளில் ஒருவர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக நம் இந்திய மக்களின் அடிமைத் தளையைப் போக்க, விடுதலை உணர்வை உருவாக்க, மஹாத்மா காந்தி அறிவித்த கதர் புரட்சியில் ஈடுபட்டவர். தானே ராட்டையில் நூல் நூற்று அந்த நூல்களை விற்று அந்தத் தொகையையும் மஹாத்மா காந்தியிடம் அளித்தவர், அது மட்டுமல்ல, பெண்கள் வெளியே வரவே பயந்த அந்தக் காலத்திலேயே, "வாருங்கள் மறியல் செய்து மனம் மகிழ்ந்திட வாருங்கள்" என்று வை.மூ. கோதைநாயகி அம்மையாருடன் பாடிக்கொண்டே சென்று மிக தைரியமாக தன்னுடைய கையில் அணிந்திருந்த தங்க வளையல்களை மஹாத்மா காந்தியிடம் தேசத்துக்காகக் கழற்றிக் கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்த அனைவரும் திட்டுவார்களோ என்று பயந்து கொண்டே வந்து, ஆனால் என்னுடைய தாத்தா நரசிம்மாச்சாரியர் அவர்களால் பாராட்டு வாங்கியவர் என் தாயார்.
அது மட்டுமல்ல, என்னுடைய தாயார் ஆர். கமலம்மாள் அவர்கள் எழுதிய பல கதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்தன, அவர்கள் எழுதிய பல பாடல்கள், பம்பாய் சகோதரிகளால் பாடப்பட்டு, திரு எல். கிருஷ்ணன் அவர்களால் இசை அமைக்கப்பட்டு, சங்கீதா ஒலி நிறுவனத்தால், "தெய்வீகப் பாமாலை" என்னும் பெயரில் ஒலிநாடாவாக வெளியிடப் பட்டது. மேலும் பாரத ஸ்டேட் வங்கியும், அமுத சுரபியும், ஜன்கல்யாண் என்று சங்கராச்சாரியாரால் நடத்தப் பட்ட அமைப்பும் சேர்ந்து நடத்திய கதைப் போட்டியில் என் தாயார் அவர்களால் எழுதப் பட்ட, "கிருஷ்ண தீர்த்தம்" என்கிற சிறுகதை முதற்பரிசு அளிக்கப் பட்டு, சங்கராச்சாரியாரின் திருக்கரங்களால் தங்கக் காசு அளிக்கப்பட்டு பெருமைப் படுத்தப் பட்டது.
நான் பிறந்த போது என் தாயாருக்கு ப்ரசவம் பார்த்தவர் யார் தெரியுமா? டாக்டர் திரிபுர சுந்தரி, எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள். இந்த விஷயத்தை நான் லூகாஸ் டீ.வீ .எஸ்.ஸில் பணி புறிந்த போது நான் எழுதி இயக்கிய நாடகத்துக்கு தலைமை தாங்க வந்திருந்த போது, எழுத்தாளர் லக்ஷ்மி ஆகிய டாக்டர் திரிபுர சுந்தரி அம்மையாரே தன்னுடைய வாயால் மேடையிலேயே என்னை அழைத்துப் பாராட்டிவிட்டு என்னை அவர்கள் கையில் பூத்த மலர் என்று வர்ணித்தார்கள். இன்று நான் ஒரு நடிகன், பாடகன், எழுத்தாளன், கவிஞன், கலைஞன், என்னுடைய அத்துணை கலைகளுக்கும் மாதா, குரு, தெய்வம், ஆகிய அனைத்துமே என்னுடைய தாயார் ஆர். கமலம்மாள் அவர்களே.
அவர்களை நான் என்றும் வணங்கித்தான் என்னுடைய அத்துணை நற்காரியங்களையும் செய்து வருகிறேன், அவருடைய ஆசீர்வாதத்துடன்.
அன்புடன்
தமிழ்த்தேனீ