தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - அந்தத்
தமிழெங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
அடையாளம் பெறுவோம்
அன்புள்ள நண்பர்களே,அடையாளம் தொலைத்தவர்களாய் நாம் இருந்தால் மன்னிக்கப் படலாம். அடையாளமே இல்லாதவர்களாக நாம் இருந்தால் மன்னிக்கப்பட தகுதி இல்லாதவர் ஆகிறோம் நாம். ஆமாம் அடையாளம் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை அளிக்கப்பட்டே ஆக வேண்டும், அல்லது நாம் போராடி பெற்றே ஆக வேண்டும்.
இது எவ்வளவு முக்கியமான செய்தி தெரியுமா? ஆடுகளுக்கு, மாடுகளுக்கு, நாய்களுக்கு, ஒட்டகம், குதிரை போன்ற விலங்குகளுக்கு, அதேபோல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய சில விலங்குகளை தெரிந்தெடுக்கும்போது தொடர் ஆராய்ச்சியின் பயன் தெரிய அடையாளம் வைக்கிறார்கள். அந்த விலங்கு யாருடையது, அவருக்கு இருக்கும் மொத்த விலங்குகளில் அந்த குறிப்பிட்ட விலங்கு எத்தனையாவது என்று தெரிந்து கொள்ள அதற்கு ஒரு அடையாளக் குறி வைக்கிறார்கள். ஆனால் மாக்களிலிருந்து மாறுபட்ட மக்களுக்கு அடையாளம் இல்லாதது எவ்வளவு கொடுமையான நிலைமை?
நான் ஏன் ஒவ்வொரு மனிதருக்கும் அடையாளம் வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்றால், நம் நாட்டின், அல்லது உலகத்திலிலுள்ள அத்தனை நாடுகளிலும் இருக்கும் மனிதர்களுக்கு பல நாடுகளில் அடையாள அட்டைவழங்கப்படுகிறது. ஆனாலும் பலவிதமான விஞ்ஞான வசதிகளில் முன்னேறியிருக்கும் பல மேல் நாடுகளில் கூட குற்றங்கள் செய்வோரை கண்டுபிடிக்க இயலாமல் பலகுற்றங்களில் காவல் துறையினர் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பது உண்மை.
இப்போது யோசித்துப் பாருங்கள், ஒவ்வொரு மனிதருக்கும் அந்த நபரைப் பற்றிய முழு விவரங்களும் சரியான குறிப்புகளோடு அடங்கிய குறிப்புகள் கணிணியில் சேமித்து வைக்கப் பட்டு அடையாள அட்டை வழங்கப்படுவது இன்றியமையாதது. சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப் பட்டேன். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் ஒரு பெண்மணி கர்ப்பமாயிருந்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் வீட்டுப் பகுதியிலேயே குடியிருந்த ஒரு மற்றொரு பெண்மணி நட்பாகி மிகவும் உரிமையோடு பழக ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருபெண்மணிகளும் அடிக்கடி வெளியே உரிமையோடு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். அந்த கர்பிணிப் பெண் எட்டுமாதக் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள்.
அப்படி ஒரு நாள் வெளியே சென்றிருக்கும்போது அந்த பெண்மணியை ஏதோ தனியாக ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவளை தாக்கி மயக்கமுறச் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக அக்குழந்தையை வெளியேற்றி அந்தப் பெண்மணியை குற்றுயிரும் குலைஉயிருமாக அங்கேயே போட்டு விட்டு குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்திருக்கிறாள் அந்த நட்புறவு கொண்ட பெண். அவளைப் பெண் என்றே கூற மனம் வெறுக்கிறது,
குழந்தையின் தாய் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு உதிரப் போக்குடனே மிகவும் முயன்று தத்தி தவழ்ந்து வெகுதூரம் வந்து உதவி கோரியிருக்கிறாள். அவளை யதேச்சையாகப் பார்த்து சிலர் உதவி செய்து மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணி அளித்த புகாரின் காரணமாக அக்குழந்தையை எடுத்துச் சென்ற பெண்மணியை காவல் துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.
எப்படி?
இந்த பெண் அளித்த விவரங்கள் மூலமாக அவளின் அடையாள அட்டையக் கொண்டு கண்டு பிடித்திருக்கிறார்கள். இப்படி எந்த அடையாளமும் இல்லாவிடில் எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? இப்போது யோசித்துப் பாருங்கள் அடையாள அட்டை எவ்வளவு முக்கியம் என்று?
நம் நாட்டில் வாக்காளர் அட்டை எனப்படும் அட்டையை நமக்கு வழங்கவே இவ்வளவு நாட்களாகின்றன. வழங்கப் பட்ட அட்டைகளும் ஆணின் பெயரோடு பெண்ணின் புகைப்படம், பெண்ணின் பெயரோடு ஆணின் புகைப்படம், வாலிபர்களின் புகைப்படத்தோடு ஒரு மூதாட்டியின் பெயரோடு, இப்படியெல்லாம் அளிக்கிறார்கள். இப்படி இருக்கும் போது அடிக்கடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வெடிப்பு போன்ற குற்றங்கள் நடக்கும் போத எப்படி குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும்?
அதேபோல் பல அப்பாவிகள் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு கடுஞ்சிறையில் தள்ளப்படும் அபாயமும் இருக்கிறது. இப்படியெல்லாம் நடவாதிருக்க உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண சரியான அடையாள அட்டைகள் அரசு வழங்க வேண்டும். அல்லது நாமாவது நம் கடமைகளை உணர்ந்து போராடியாவது பெறவேண்டும் அடையாள அட்டைகளை சரியான விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை வாங்கியே தீர வேண்டும் என்னும் கால கட்டாயத்தில் நாமிருக்கிறோம், பெறுவோம் அடையாள அட்டையை.
"தனி மனிதருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை
அழித்திடுவோம் என்றார் பாரதியார்'
தனி மனிதருக்கு அடையாள அட்டை இல்லையெனில் நாம் அழிந்து விடுவோம், அது மட்டுமல்ல நம்முடைய அடிப்படை உரிமையான வாக்களிப்பதில் கூட யாரோ ஒருவர் நம் பெயரில் நாம் விரும்பாத ஒருவருக்கு வாக்களித்து நாடே அழியும் நிலை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. ஆகவே முதலில் நாட்டைக் காக்க நம்மைக் காத்துக் கொள்ள அடையாள அட்டை பெறுவோம்.
அந்த அடையாள அட்டையை எடுத்துக் கொள்ளாமல் யாரும் எங்கும் போகக் கூடாது என்று சட்டம் போடவேண்டும். குடும்ப நுகர்வோர் அட்டையை வழங்கும்போதே இந்த அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
அப்படி செய்தால் நாட்டில் குற்றங்கள் குறையும்
அன்புடன்
தமிழ்த்தேனீ